Friday 11 May 2012

பெரியப்பா

என் அப்பா வழி சொந்தத்தில் பெரியப்பா ஒருவர் இருந்தார் ... சொந்தங்களின் வழியில் பார்த்தால் ஏதோ பெயர் சொல்ல தெரியாத ரொம்ப தூரத்து சொந்தம் தான் வரும்... என் அப்பா தான் குடும்பத்தில் மூத்தவர் ஆதலால், அவரே அவரை 'அண்ணா' என்று அழைப்பதால் நாங்கள் எல்லாரும் அவரை பெரியப்பா என்று தான் கூப்பிடுவோம்...

கட்டை பிரம்மச்சாரி....ஒடிசலான உடம்பு...காத்தாடி ராமமூர்த்தி கருப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார்...ராயபேட்டை அருகே  எங்கோ தங்கி இருந்தார்... வீட்டு விசேஷங்களிலும், கல்யாணங்களில் மட்டுமே தலை காண்பிப்பார்...கல்யாண பத்திரிக்கை கூட எங்கப்பா மூலமாக தான் அவருக்கு போய் சேரும்...பல சொந்தங்கள் எங்கள் வீட்டிற்கு வரும்போது அவருக்கும் பத்திரிக்கை கொடுக்க சொல்லி என் அப்பாவிடம் கொடுத்து விடுவார்கள்..

ரொம்பவும் கோபக்காரர் என்றும் அதனாலே எந்த சொந்தங்களோடும் ஒட்டுதல் கிடையாது....அரசாங்க வேலையில் இருந்ததாகவும் கோபத்தில் அந்த வேலையை விட்டு விட்டார்.. பிறகு கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை  என  சில விஷயங்கள் என் அப்பா சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அவரை பற்றி..

என் சிறு வயதில் நாங்கள் மயிலாப்பூரில் இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு வரும்போது எல்லாம் முந்திரி பகோடா, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போன்று அன்றைய மிடில் கிளாஸ் குடும்பங்கள் வாங்க முற்படாத விஷயங்களோடு வந்து விடுவார்...எனக்கு சின்ன வயதில் காசு கொடுப்பார் என் அம்மாவிற்கு தெரியாமல்....அதனாலே அவர் மேல் எனக்கு அலாதி ப்ரியம்...

அந்த காலத்து PUC தான் அவர் படிப்பு என நினைக்கிறேன்...பல சமயம் அதை பெருமையாக சொல்வதை கேட்டு இருக்கிறேன்...அந்த காலத்து PUC இந்த காலத்து B .Comக்கு சமம் என்பார்

சில நாட்கள் எனக்கு அம்புலி மாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் , ஜாவர் சீதாராமன் கதைகள்,     என் அப்பாவிற்கு மாலைமதி, ஆனந்த விகடன் என சில நேரம் புத்தகங்களோடும் வருவார்...எல்லாம் அவர் படித்த பழைய புத்தகங்கள் தான் என்பார்....அந்த நேரங்களில் அவர் பக்கத்திலே போய் நின்றால் ' மாச கடைசி குழந்தே, காசு இல்லை, அதனால தான் புக்ஸ் வங்கி வந்தேன்' என்பார்.....எனக்கு வாசிக்கும் வழக்கம் ஏற்பட என் தந்தையை போல அவரும் ஒரு முக்கிய காரணம்

என்ன வேலை பார்க்கிறார், எங்கே தங்கி இருக்கிறார் எதுவுமே எனக்கு தெரியாது...தெரிந்து கொள்ள முற்படாத வயது என்று கூட சொல்லலாம்... உலகத்தின் எல்லா விஷயங்களும் பேசுவார்...சில சமயம் மூச்சு விடாமல் 2 மணி நேரம் கூட பேசுவார் என் அப்பாவிடம்...

அவர் வீட்டிற்கு வந்ததும் என் அம்மா செய்யும் முதல் வேலை சுட சுட பில்ட்டர் காபி தருவது தான்... பல நேரம் அந்த காபி குடித்தவுடன் "உங்களுக்கு வேலை இருக்கும்... நான் வேற எதுக்கு தொந்தரவு" என என் அப்பாவிடம் சொல்லி விட்டு கிளம்பி விடுவார் மனிதர்....

என் அம்மா கோயிலுக்கு சென்று இருக்கும் நேரம் அவர் வந்தால் மட்டுமே ரொம்ப நேரம் என் அப்பாவிடம் பேசிவிட்டு அம்மா வந்தவுடன் காபி கொடுக்க சொல்லி உரிமையோடு கேட்டு குடித்துவிட்டு கிளம்பி விடுவார்.....

என் அப்பா இல்லாத நேரங்களில் பல நேரம் உலக விஷயங்கள் அனைத்தையும் என்னிடம் பேசுவர்... அந்த வயதிற்கு பல விஷயங்கள் எனக்கு புரியாது...புரிந்ததை போல தலையாட்டி தப்பித்து விடுவேன்...உலகத்தில் உள்ள அனைவரும்
ஹிந்துக்கள் என RSSகாரர் போல பேசுவார் ஒருநாள் ....கிரிக்கெட் பிளேயர் பீட்டர் கிர்ஸ்டன் (PETER KIRSTEN) உண்மை பெயர் கிருஷ்ணன் என்பார்...
சேஷ ஐயர் தான் மருவி Shakesphere ஆனார் என்பார்...

திடீரென ஒரு நாள் Sher Sha ஆரம்பித்து வகுத்த நில உச்ச வரம்பு சட்டம் ( Land cieling act ) பற்றி பேசுவார்...அப்படி பட்ட அவர் பேச்சுகளில் மார்க்சியம் தெறிக்கும்.

.ஒரு நாள் தமிழ் மனப்பாட பகுதி முழுவதும் ஒப்பிக்க சொல்லுவார் என்னை...வழக்கம் போல காபி குடிக்கும் வரை தான் உரையாடல் ஓடும் என்னிடம்...பிறகு சிறிது நேரத்துக்கு எல்லாம் கிளம்பி விடுவார்

எனக்கு சற்று விவரம் தெரிந்தவுடன் தான் மனிதர் காபி குடிக்க மட்டும் தான் எங்கள் வீட்டிற்கு வருகிறாரோ என நினைக்க தோன்றியது .. ஒரு காபிக்காக கிட்ட தட்ட 20 அல்லது 30 ரூபாய் செலவு பண்ணி எனக்கு ஏதாவது வாங்கி வருவாரா என்ன.....ஹோட்டலுக்கு போனால் 3 ரூபாய்க்கு காபி கிடைக்கும் அன்றைய நாட்களில்...

என் அப்பாவிடம் பெரியப்பா என்ன வேலை பார்க்கிறார் என கேட்டால் சிரித்து மழுப்பிவிடுவார்....

சில நாள் அவர் வரும்போது அவர் தன்னுடைய முழங்கை மடித்து என்னோடு பலப்பரிட்சை செய்வார்...ஒரு நாளும் அவர் தோற்றது கிடையாது...ஆனால் சில நாட்கள் எனக்கு விட்டு கொடுத்து விடுவார்

ஒரு நாள் நண்பன் சரவணன் தலைமையில் KHO KHO  மேட்ச் விளையாட ராயப்பேட்டை வெஸ்லி ஸ்கூல் வரை சென்றோம்...நண்பர்களோடு மதியம் சாப்பாட்டிற்கு அங்கே ஒரு ஹோட்டலுக்கு சென்றோம்...கல்லாவில் பெரியப்பா உக்கார்ந்து கொண்டு இருந்தார்...எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது... அவர் என்னை கவனித்ததாக தெரியவில்லை...

சாப்பாடு token வாங்கி கொண்டு வந்தான் ஒரு நண்பன்...பெரியப்பா கல்லாவில் உட்கார்ந்து கொண்டு கொஞ்ச நேரம் சில்லறைகளை எண்ணி அடுக்கி கொண்டு இருந்தார்... சிறிது நேரத்தில் முதலாளி போல ஒருத்தர் வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்தார்...அவர் வந்துதும் பெரியப்பா அங்கே இருந்து எழுந்து அவருக்கு கல்லா நாற்காலியை  கொடுத்து விட்டு பக்கத்துக்கு டேபிள் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தார்...ரொம்ப நேரம் அவர் அரை வாலி சாம்பாரை கையிலே பிடித்துக்கொண்டு நின்று இருந்தார்...அன்று தான் எனக்கு அவரின் முழங்கை பலத்தின் காரணம் புரிந்தது...

சிறிது நேரத்துக்கெல்லாம் என்னை அவர் பார்த்து விட்டார்... சட்டென்று முகம் மாறியது அவருக்கு... சற்று நேரத்துக்கு பிறகு முதலாளிக்கு தெரியாமல் எங்கள் எல்லாருக்கும் எக்ஸ்ட்ரா அப்பளம், தயிர் எல்லாம் கொடுத்து விட்டு முதலாளியிடம் ஏதோ சொல்லி விட்டு வெளியே போய் விட்டார் அன்று...அவர் சென்ற பிறகு தான் ஹோட்டல் உள்ளே இருக்கும் ஸ்வீட் ஸ்டாலையும் அங்கே இருக்கும் ரசகுல்லா,குலாப் ஜாமுன், முந்திரி பகோடா போன்ற வஸ்துக்களையும், அந்த ஹோட்டல் அருகே இருந்த பழைய பேப்பர் கடையில் இருந்த அம்புலி மாமாவையும், ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களையும் கவனித்தேன்...

அதன் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு வருவது சுத்தமாக குறைந்தது....ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு நாள் அந்த பக்கம் போகும் போது ஹோட்டல் பக்கம் எட்டி பார்த்தேன்...அன்றும் ஏதோ சப்ளை செய்து கொண்டு இருந்தார்... என்னை பார்த்தவுடன் மசாலா தோசை ஆர்டர் பண்ணி என்னை சாப்பிட சொன்னார்....அவரே எடுத்துக்கொண்டு வந்து சப்ளை செய்தார்...
பிறகு காபி சாப்பிடுறியா? என கேட்டார்... நான் அவரையே பார்த்து கொண்டு இருந்தேன்...என்ன நினைத்தாரோ என்னவோ..."வேண்டாம் ஹோட்டல் காபி
நல்லா இருக்காது.. காபி வேண்டாம்" என்றார்...கல்லாவில் முதலாளி இல்லை அன்றும்..


"வீட்டிற்கு வாங்க பெரியப்பா" என சொல்லி விட்டு வரலாம் போல தோன்றியது எனக்கு... எதுவும் சொல்லாமல் வந்து விட்டேன் அன்று...

சில வருடங்களுக்கு பிறகு பல நாள் அந்த ஹோட்டல் பக்கம் போய் இருக்கிறேன்...ஒரு நாள் கூட அவரை அங்கே பார்த்ததில்லை...ஒரு நாள் அவரைப் பற்றி விசாரித்ததில் ஏதோ சண்டை போட்டு கொண்டு வேலையை விட்டு போய் விட்டதாக சொன்னார்கள்....

"ரொம்ப நல்லவன்...ஆனா கோபக்காரன்...காசியில் உள்ள ஏதோ ஒரு மடத்தில் சமையல் வேலை செய்ய போய் விட்டதாக கேள்வி"  என முதலாளி சொன்னார்....

அன்றைக்கு பிறகு சொந்தக்காரர்களின் ஒரு கல்யாணத்தில் கூட அவரை பார்த்ததில்லை ......எனக்கு என்னமோ நான் அவரை கடைசியாக அந்த ஹோட்டலில் பார்த்த அன்றே வீட்டுக்கு வர சொல்லி இருந்தால் அவர் காசிக்கு போயிருக்க மாட்டாரோ என தோன்றியது.....

என் தாத்தா பாட்டி இருவருக்கும் காசிக்கு போய் கர்மா செய்ய வேண்டும் என என் அப்பா சொல்லி கொண்டு இருக்கிறார் சில நாட்களாய் ...அப்பா அம்மாவோடு துணைக்கு காசிக்கு குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் செல்லலாம் என யோசித்து கொண்டு இருக்கிறேன் பெரியப்பாவையும்  மனதில் வைத்து கொண்டு.......

2 comments:

  1. கட்டாயம் போய் வாங்க ..காணமல் போன பெரியப்பா கிடைக்கக் கூடும் ..நினைவலை நெகிழ்ச்சி தருகிறது .

    ReplyDelete
  2. மனம் கனக்கிறது... காணாமல் போன பெரியப்பாவை பார்க்கவேண்டும் போல இருக்கிறது.. மனிதர்களின் அருமை இருக்கும்போது தெரிவதில்லை.காபிக்காக இல்லை. மனிதத்தை தேடி வந்த பெரியப்பா...வயதாக ஆக, பேச்சுத்துணையே அதிகம் தேவைப்படுகிறது..

    ReplyDelete